ஸ்ரீராமானுஜர் வாழ்கை வரலாறு சித்திர வடிவில்

உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்
மூன்று மாதங்களில் யாதவர் காசி யாத்திரையை முடித்து ஊர் திரும்பினார். ஆனால் அவருடன் சென்ற கோவிந்தன் மட்டும் திரும்பவில்லை. ஏன் என்று கேட்டபோது தெரிந்தது இதுதான்:
கங்கையில் நீராடும்போது, கோவிந்தனின் கையில் ஒரு சிவலிங்கம் கிடைத்தது. அதை என்ன செய்வது என்று தெரியாமல் அவர் குழம்பினார். அப்போது யாதவர்,
“நீ மிகவும் பாக்கியசாலி. கங்கையில் நீராடிய பயன் உனக்குக் கிடைத்துவிட்டது. இனிமேல் நீ ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என அழைக்கப்படுவாய்” என்று புகழ்ந்தார்.
பின்னர், அந்த லிங்கத்தை காளஹஸ்தியில் அமைதியான இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று யாதவர் உத்தரவிட்டார். அதற்கு சம்மதித்த கோவிந்தன், தன் பெற்றோருக்கு செய்தி சொல்லுமாறு கூறி, காளஹஸ்தியில் தங்கி விட்டார்.
இராமாநுஜர் உயிருடன் காஞ்சிக்கு திரும்பியது யாதவருக்கு ஏமாற்றமாக இருந்தாலும், கோவிந்தன் சைவனானது அவருக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. அவர் பழைய பகையை மறந்து, இராமாநுஜரிடம் அன்பாக நடந்துகொண்டார்.
காட்டில் இருந்து மீண்ட செய்தியை கேட்ட யாதவர், இராமாநுஜரை மீண்டும் வந்து வேதாந்தம் படிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீரங்கத்தில் நாதமுனிகளின் பேரனும், ஸ்ரீவைஷ்ணவ உலகின் பரமாசார்யராக விளங்கியவருமான யாமுனமுனி என்னும் ஆளவந்தாரின் முக்கிய சிஷ்யர்கள்.
- பெரிய நம்பி (ராமானுஜரைத் திருவரங்கத்திற்கு அழைத்து வந்தவர்)
- திருக்கோட்டியூர் நம்பி (திருமந்திரத்தின் பொருளை ராமானுஜருக்குக் கற்பித்தவர்)
- பெரிய திருமலை நம்பி (ராமாயணத்தின் பொருளை ராமானுஜருக்குக் கற்பித்தவர்)
- திருமாலை ஆண்டான் (திருவாய்மொழிப் பொருளை ராமானுஜருக்குக் கற்பித்தவர்)
- மாறனேரி நம்பி
- திருக்கச்சி நம்பிகள்
- திருவரங்கப் பெருமாள் அரையர்

ஒருமுறை ஸ்ரீரங்கத்திலிருந்து ஆளவந்தார் காஞ்சிக்கு வந்தார். இராமாநுஜரைப் பற்றி கச்சி நம்பியிடம் இருந்து ஏற்கனவே பல தகவல்களை அவர் கேட்டிருந்தார். ஞானம், அழகு, நல்ல குணங்கள், பேசும் திறன் ஆகிய அனைத்தும் நிறைந்த இராமாநுஜரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.
அப்போது கோயிலில் யாதவப் பிரகாசர் தன் சீடர்களுடன் வரதராஜப் பெருமானை வழிபட்டு, இராமாநுஜரின் தோளில் கை வைத்தபடி வலம் வந்து கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் ஆளவந்தாருடன் வந்த கச்சி நம்பி, இராமாநுஜரை காட்டி,
“யாதவரிடம் பயிலும் நிலையிலிருந்தாலும், திருமாலே உயர்ந்த தெய்வம் என்ற வேதாந்த உண்மையை இயற்கையாகவே நன்கு உணர்ந்தவர் இவர்தான்” என்று சொன்னார்.
இதை கேட்ட ஆளவந்தார், இராமாநுஜரை அன்புடன் பார்த்து மனம் மகிழ்ந்து,
“ஆம், இவர்தான் சரியான தலைவர்” என்று கூறி, எதிர்காலத்தில் வைணவ சமயத்தை வழிநடத்த இவரே தகுதியானவர் என்று தீர்மானித்தார்.
பின்னர் கச்சி நம்பியிடம் விடைபெற்று ஸ்ரீரங்கம் திரும்பினார்.

யாதவப் பிரகாசரை விட்டுப் பிரிந்து, இராமாநுஜர் கச்சி நம்பியுடன் கோவில் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி ஸ்ரீரங்கத்தில் இருந்த ஆளவந்தாருக்கு கிடைத்தது. வயதும், ஞானமும், பக்தியும் நிறைந்த நிலையில் இருந்த அவர், இந்த செய்தியைக் கேட்டு மிக மகிழ்ந்தார்.
உடனே தம் சீடர்களில் ஒருவரான பெரிய நம்பியை காஞ்சிக்கு அனுப்பி, இராமாநுஜரை உடனே அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
பெரிய நம்பி சில நாட்கள் நடந்தும் ஓடியும் காஞ்சிக்கு வந்து, கச்சி நம்பியின் வீட்டில் தங்கி, இராமாநுஜரை சந்திக்கக் காத்திருந்தார்.
அப்போது இராமாநுஜர் சாலைக்கிணற்றுத் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு வரதராஜப் பெருமாள் சந்நிதிக்குச் சென்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட பெரிய நம்பி, ஸ்ரீ ஆளவந்தார் இயற்றிய “ஸ்தோத்திர ரத்னம்” என்ற புகழ்பாடலை உரத்த குரலில் பாடிக்கொண்டே அருகில் வந்தார்.
அந்த பாடலின் இனிமையும், அர்த்த ஆழமும், தத்துவச் சிறப்பும் இராமாநுஜரின் மனதை கவர்ந்தது.
“இத்தனை அழகான துதியை இயற்றிய மகான் யார்?” என்று அவர் கேட்டார்.
அதற்கு பெரிய நம்பி,
“ஸ்ரீவைஷ்ணவ உலகின் உயர்ந்த ஆசார்யரான ஸ்ரீ ஆளவந்தார்தான் இதை அருளியவர்” என்று பதில் கூறினார்.
இதைக் கேட்டதும் இராமாநுஜரின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
“அத்தகைய பெரிய ஆசார்யரை உடனே சந்திக்க வேண்டும்” என்று அவர் விரும்பினார்.
அப்போது பெரிய நம்பி,
“ஸ்ரீ ஆளவந்தாரின் ஆணைப்படியே உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளேன். உடனே புறப்பட வேண்டும்” என்றார்.
இராமாநுஜர், கோவிலில் தீர்த்தத்தைச் சேர்த்துவிட்டு வர சிறிது நேரம் கேட்டார். அதை முடித்தபின், பெரிய நம்பி கச்சி நம்பியிடம் விடைபெற்று, இராமாநுஜரை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் பெரிய கோயிலுக்குப் புறப்பட்டார்.

நாலு நாள் நடந்துபோய் காவிரிக்கரையை அடைந்த போது, ஸ்ரீ ஆளவந்தார் மறைந்துவிட்டார் என்ற செய்தி அவர்களுக்கு கிடைத்தது. இதைக் கேட்ட இராமாநுஜர் மிகுந்த வேதனையடைந்து அழுதார்.
ஆளவந்தாரின் திருமேனியைப் பார்த்து துயரப்பட்ட அவரை பெரிய நம்பி ஆறுதல் கூறினார். பின்னர், ஆளவந்தாரின் இறுதிச்சடங்கு ஸ்ரீரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.